சகல தரப்பினருடனும் நேரடியான, அதாவது வெளிப்படையான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகக் கூறிய நிஷா தேசாய் பிஸ்வால், இலங்கைப் பிரச்சனையில் அமெரிக்காவின் பங்கு என்ன என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெளிவுபடுத்தியதாகத் தெரிவித்தார்.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால உறவு என்பது அரசுக்கும் அரசுக்கும் இடையிலானது மட்டுமல்ல, ‘மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலானது’ என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீள வலியுறுத்துவதாக அவர் கூறினார்.
இலங்கையில் நடந்த சந்திப்புகள் ஆக்கபூர்வமானவையாகவும் ஒத்துழைப்பு சார்ந்ததாகவும் அமைந்ததாகவும் நிஷா பிஸ்வால் கூறினார்.
இலங்கையில் நீதி, மீள்நல்லிணக்கம், போர்க்காலச் சம்பவங்களுக்கான பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில் இலங்கை போதுமான முன்னேற்றத்தைக் காட்டவில்லை என்ற அமெரிக்காவின் கவலைகளை சிறிலங்கா அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அமெரிக்க உதவி வெளியுறவுச் செயலர் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
ஆனால் எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளின் அமுலாக்கம் உட்பட பல விடயங்களில் சிறிலங்கா அரசு முன்னேற்றம் காட்டவில்லை என்பதால் பொறுமை இழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் மனித உரிமைகளுக்கான மரியாதை மோசமடைந்து வருகின்றமை, மதச் சிறுபான்மையினருக்கு எதிரான தொடர் தாக்குதல்கள், சட்டத்தின் ஆட்சி சீர்கெட்டு- ஊழல்களும் சட்டத்தின் பிடியில் குற்றவாளிகள் சிக்காத தன்மையும் இலங்கையின் ஜனநாயக பாரம்பரியத்தின் பெருமையை சீரழிப்பதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை ஏற்கமுடியாது என்றும் அமெரிக்க உதவி வெளியுறவுச் செயலர் கூறினார்.
எனவே இலங்கையில் மீள் நல்லிணக்கத்தையும் ஜனநாயக ஆட்சியையும் நீதி மற்றும் பொறுப்புக்க கூறலையும் ஏற்படுத்துமாறு வலியுறுத்தி ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் மூன்றாவது தீர்மானத்தையும் அமெரிக்கா கொண்டுவரும் என்றும் நிஷா பிஸ்வால் கொழும்பில் இன்று தெரிவித்தார்.
அந்த தீர்மானத்தில் என்னவகையான வாசகங்கள் இருக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது என்றும் இலங்கை மக்களின் நட்புணர்வுடன் அது இசைந்து போகும் என்றும் அவர் கூறினார்.