பயங்காரவாதத்துக்கு எதிரான மனிதாபிமானப் போரே சிறிலங்கா அரச படையினர் நடத்தினர் எனும் தொனிப் பொருளில் ‘விருவங்கே வித்தி வாசக்கய’ என்ற பெயரிலான அறிக்கை ஒன்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பு போரில் இனப்படுகொலைகளிலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள, சிறிலங்காவின் லெப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க, ரியர் அட்மிரல் எச்.ஆர். அமரவீர, ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, மேஜர் ஜெனரல் சீவலி வணிகசேகர, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் இந்த அறிக்கையினை சமீபத்தில் கொழும்பில் வெளியிட்டிருந்தனர்.
சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இந்த அறிக்கையினை கையளிக்கப்பட்டுள்ளதோடு, ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்பிக்கும் நோக்கில் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அவர்கள் வியாழக்கிழமை (மார்ச் 16 ) ஜெனீவா செல்லவுள்ளதாக சிறிலங்கா தரப்பினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரியர் அட்மிரல் சரத் வீரசேகரக்கு எதிராக வழக்கொன்றினை தொடுக்கும் முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவின் அரசுத் தலைவராக இருந்த மகிந்த ராஜபகச்வுக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராகவும், சட்டவாளராகவும் இருக்கின்ற வி.உருத்திரகுமாரன் அவர்கள் தொடுத்திருந்தார்.
இருப்பினும் நாடொன்றின் அரசுத் தலைவருக்கு உரிய இராஜீகரீதியிலான வாய்புக்களின் வழியே அந்த வழக்கில் இருந்து மகிந்த ராஜபக்ச தப்பியிருந்தார்.
தற்போது ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபைக்கு வரவிருக்கின்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவும், ஐ.நா வழங்குகின்ற அனைவருக்குமான வெளியினைப் பயன்படுத்தி தப்புவாரா என்ற கேள்வி எழுகின்றது.
இருப்பினும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த முனைப்பு, இரத்தம் தோய்ந்த சிறிலங்காவின் முகத்தினை ஜெனீவாவில் மீண்டுமொருமுறை அம்பலப்படுத்தும் என்பது இங்கு குறிப்பிடதக்கது.