தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி லண்டனில் போராட்டம்

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி நாளை லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
குறித்த போராட்டத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு இவர்கள் கோரிக்கை விடுத்து பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் இரு தடவைகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அரசாங்கத்தின் வாக்குறுதிக்கு அமைவாக தமது உண்ணாவிரத போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது தமது விடுதலை தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்காது ஜனாதிபதி தம்மை ஏமாற்றி விட்டதாக கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு, கைதிகளின் விடுதலை தொடர்பில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்னர் பூரண ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
லண்டனில் போராட்டம்
Comments (0)
Add Comment