தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக நிரந்தர உதவிச்செயலாளர் சிமொன் மக்டொனால்ட், சர்வதேச அபிவிருத்திக்கான பிரித்தானிய திணைக்களத்தின் நிரந்தர உதவிச்செயலாளர் மார்க் லோகொக் உள்ளிட்ட தலைமையிலான குழுவினருக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பு குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமக்கும் பிரித்தானிய குழுவினருக்கும் இடையிலான சந்திப்பில் அரசியல் தீர்வு குறித்தே கலந்துரையாடப்பட்டிருந்தது. எம்மை சந்திப்பதற்கு முன்னதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அக்குழுவினர் சந்தித்திருந்தார்கள். அவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பு குறித்த பிரதமரின் கருத்து உள்ளடங்கலாக சில விடயங்களை எம்மிடத்தில் வினவியிருந்தனர். குறிப்பாக புதிய அரசியலமைப்பு குறித்து எமது அடிப்படை நிலைப்பாடுகள், எமது நம்பிக்கைகள் குறித்து அவ்வினாக்கள் அமைந்திருந்தன.
இதன்போது இலங்கையில் காணப்படும் பிரதான இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்திருக்கும் புதிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்களினுடைய இணக்கப்பாடு காணப்பட்டிருக்கவில்லை. அவ்வாறான நிலைமையே பாரிய பிரச்சினைகள், மூன்று தசாப்த யுத்தம் போன்றவற்றுக்கு வழிவகுத்திருந்தது என்பதை சுட்டிக்காட்டினோம்.
அதேநேரம் தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பமானது எமது மக்களுடைய அடிப்படை அபிலாஷைகள் அனைத்தும் உள்வாங்கப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் பட்சத்தில் அது நாட்டில் நிரந்தரமான தீர்வொன்றை ஏற்படுத்தும். அதுவே இந்த நாடு புதியதொரு பாதையில் பயணிப்பதற்கான சந்தர்ப்பமாகவிருக்கும். அண்மைக்காலத்தில் சர்வதேச சமூகம் இலங்கை விடயத்தில் ஆர்வம் காட்டி அழுத்தங்களை செலுத்தி வருகின்றார்கள். தொடர்ச்சியாக அவர்களுடைய கரிசனையும் அழுத்தங்களும் காணப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம்.
தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்களின் அடிப்படை அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பாக புதிய அரசியலமைப்பு அமையவேண்டுமென்பதை தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு உணர்த்தவேண்டுமெனவும் குறித்த குழுவினரிடத்தில் கேட்டுக்கொண்டோம் என்றார்.
சமஷ்டி சொற்பிரயோகம்
இதேவேளை சமஷ்டி என்ற சொற்பிரயோகத்தை அரசியலமைப்பில் நேரடியாக பயன்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டதான என்ற வினாவுக்கு பதிலளித்த அவர், அது பற்றி மேற்படி சந்திப்பில் பேசப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
கூட்டமைப்பின் நிலைப்பாடு
சமஷ்டி என்ற சொற்பிரயோகத்தை அரசியலமைப்பில் நேரடியாகப் பயன்படுத்துவது தொடர்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடு எவ்வாறுள்ளது என்ற வினாவுக்கு பதிலளித்த சுமந்திரன் எம்.பி,
சொற்பதங்களை பயன்படுத்துவது பிரச்சினைக்கு தீர்வாகும் என நாம் ஒருகாலத்திலும் நினைத்ததில்லை. பெயர்ப்பலகைகளை எவ்வாறாவது எழுதிப்போட்டுவிடமுடியும். உள்ளடக்கத்திலே எவ்விதமான பொருளும் இல்லாவிட்டால் அதில் எவ்விதமான பலனும் கிடையாது.
சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைக்கப்படவேண்டுமென்பதே எமது மக்கள் வழங்கிய ஆணையாகும். அது சமஷ்டி என்ற பெயர்ப்பலகையை அர்த்தம் கொள்ள முடியாது. சமஷ்டியின் குணாம்சங்கள் அரசியலமைப்பிலேயே உள்வாங்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.
அதேநேரம் குறித்த சந்திப்பு திருப்திகரமாக அமைந்திருந்ததாக எதிர்க்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.