விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போருக்குப்பின், தாயகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஸ்ரீலங்கா ராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளது.
தமிழர்கள் வாழும் இந்த பகுதிகளில் இருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என தமிழர்களும், தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அங்கிருந்து ராணுவத்தை விலக்குமாறு பல்வேறு உலக நாடுகளும் இலங்கை அரசை நிர்ப்பந்தித்து வருகின்றன.
ஆனால் இந்த கோரிக்கைகளுக்கு ஸ்ரீலங்கா அரசு செவிசாய்க்காமல் இருந்து வருகிறது. தமிழர்கள் வாழும் பகுதியில் மீண்டும் பிரிவினைவாதம் தலைதூக்காமல் இருக்கவே அங்கு ராணுவம் தொடர்ந்து நிறுத்தப்பட்டு உள்ளது என அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ‘இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவடைந்து 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் ராணுவம் தொடர்ந்து நிறுத்தப்பட்டு உள்ளது.
இங்கு சட்டம்-ஒழுங்கை பராமரித்து மக்களின் பாதுகாப்பு பணிகளை போலீசாரே மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ராணுவம் அவசியமில்லை’ என்று கூறினார்.
ஆனால் விக்னேஸ்வரனின் இந்த கோரிக்கையை ராணுவம் நிராகரித்து விட்டது. தமிழர் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற முடியாது என கூறியுள்ளது.