வழக்கமாக 5-வது இடத்தில் முன்னாள் கேப்டன் தோனி தான் களமிறங்க வேண்டும். ஆனால் 46.2-வது ஓவரில் யுவராஜ் சிங் அவுட் ஆன போது, தோனிக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா களமிறக்கப்பட்டார். இது சற்றே அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும், கடைசியில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் அதிராடியாக விளையாடி 3 ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். 6 பந்துகளில் அவர் 20 எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தோனிக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா எப்படி களமிறக்கப்பட்டார் என்பது குறித்து கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், கடைசி நிமிடம் வரை தான் முன் கூட்டியே களமிறங்குவது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “46-வது ஓவரில் பயிற்சியாளர் கும்ளே சொல்லிய போது தான் எனக்கு முன் கூட்டியே இறங்குவது தெரியவந்தது. நீ தான் அடுத்து இறங்க போகிறாய், பேடை கட்டிக் கொள் என்று கும்ளே என்னிடம் கூறினார். உடனடியாக நான் பேட் கட்டி கொண்டேன். நான் கை உறையை போட்ட உடன் யுவராஜ் அவுட்டாகி விட்டார்” என்றார்.
முன்னதாக வெற்றி குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, அனைத்து பேட்ஸ்மேன்களையும் பாராட்டினார். குறிப்பாக ஹர்திக் பாண்டியா மிகவும் சிறப்பாக போட்டியை நிறைவு செய்தார். அவரது பேட்டிங்கு 10-க்கு 10 மார்க் போடுவேன்” என்றார்.