எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவிற்கு வாக்களிக்குமாறு கோரி யாழ்.குடாநாட்டினில் குடும்பங்களிற்கு தலா இரண்டாயிரத்து ஜநூறு பணம் அரச தரப்பினால் பகிர்ந்தளிக்கப்பட்டுவருகின்றது. சமுர்த்தி வங்கிகளில் வைத்து இப்பணம் ஈபிடிபியின் பிரதேச அமைப்பாளர்களினால் பகிர்ந்தளிக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களது வறுமையினை கேடயமாக்கி அவர்களினை சமூர்த்தி வங்கிகளிற்கு அழைத்து இவ்வாறு பணம் பகிர்ந்தளிக்கப்படுவதுடன் மஹிந்தவிற்கு வாக்களிப்போமென தமிழ்நாடு பாணியினில் கடவுள் படங்கள் முன்னிலையினில் சத்தியமும் பெறப்பட்டதாக பலனை பெற்ற பெண்ணொருவர் தெரிவித்தார்.
சமுர்த்திப்பயனாளிகளிற்கான கூட்டமென்றே அதிகாரிகள் அழைத்திருந்தனர்.ஆனால் அங்கு ஈபிடிபி அமைப்பாளர்கள் அமர்ந்திருந்து பிரச்சாரங்களை அலுவலகங்களினுள் மேற்கொண்டிருந்தனரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் அவர்கள் சொன்னதற்காக எமது வாக்களிக்கும் மனோபாவம் மாறப்போவதில்லை. மாகாணசபை தேர்தலில் சூடுபட்டும் அவர்கள் திருந்தவில்லையென்கிறார் நையாண்டியாக அவர்.
நேற்று மாலை தொடங்கிய இவ்விநியோகம் இன்றும் தொடருமென கூறப்பட்டதால் சனிக்கிழமை விடுமுறை தினமான போதும் பெருமளவிலான மக்கள் சமுர்த்தி அலுவலகங்கள் முன்னதாக குவிந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.