மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிப்பதற்காக படகொன்றில் சென்ற 03 பேரில் இருவர் காணாமல் போயுள்ளதாக அப்படகு உரிமையாளர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முறைப்பாடு செய்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், எஞ்சிய ஒருவர் படகுடன் கரைக்கு திரும்பியதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் காவல்துறையினர் கூறினர்.
காவத்தமுனை பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான யூசுப்லெப்பை தாஹிர் (வயது 38), வாழைச்சேனை மீன்பிடி இலாகா வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முஹமட் பௌசுதீன் அறபாத் (வயது 20) ஆகியோரே காணாமல் போயுள்ளனர். இதேவேளை, இப்படகுடன் திரும்பிய நபரை கைதுசெய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
நேற்றையதினம் (22) மதியம் இப்படகில் சென்ற தாங்கள் மூவரும் மதுபானம் அருந்தியதாகவும் இதன்போது, காணாமல் போனதாகக் கூறப்படும் இருவரும் சண்டையிட்டனர். சண்டையிட்ட இருவரையும் தான் சமாதானப்படுத்திவிட்டு உறங்கியதாகவும் சிறிது நேரத்தில் கண் விழித்துப் பார்த்தபோது, காணாமல் போன இருவரில் ஒருவர் வேறொரு படகில் ஏறிச் செல்வதைக் தான் கண்டதாகவும் ஆழ்கடலிலிருந்து கரைக்கு வந்த மற்றுமொரு படகின் உதவியுடன் தங்களது படகை தான் கரைக்கு கொண்டுவந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த படகில் இரத்தக்கறை படிந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதற்கிடையில், காணாமல் போன இருவர் தொடர்பிலும் அவர்களது உறவினர்களும் வாழைச்சேனை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் வாழைச்சேனை காவல்துறையினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.