தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆடி மாதம் வீரச்சாவடைந்த மாவீர்களை நினைவுகூர்ந்து, மாதாந்த நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவின் ஒக்ஸ்பேட் மாநகரில் அமைக்கப்பட்டுள்ள தமிழீழ மாவீரர் நினைவாலையத்தில் உணர்வுபூர்வமாக (31/07/2016 ஞாயிற்றுக் கிழமை ) நடைபெற்றது.
இவ்வணக்க நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக பொதுச் சுடரினை சன்ரைஸ் தமிழ் கம்யூனிட்டி சென்டர் / சவுத்கோல் அருணோதயம் தமிழாலைய அதிபர் திருமதி. சித்ரா ஜெயக்குமார் அவர்கள் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தின் தேசியக் கொடியினை கிளின்டன் தமிழ் சமூகநிலையம் சொலிசிரர் திரு. பாலசுப்பிரமணியம் அவர்களும், தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளி திரு. ஜனன் அவர்களும் ஏற்றி வைத்தனர்.
பின்னர் மாவீரர் நினைவுத்தூபிக்கான ஈகைச் சுடரினை 22/07/1991 அன்று ஆனையிறவு நோக்கி முன்னேறிய இராணுவத்துடனான மோதலின் போது வீரச்சாவை தழுவிக்கொண்ட லெப்.அன்பன் மாஸ்டர் எனும் முருகராசா ஶ்ரீதர் அவர்களின் தாயார் திருமதி. முருகராசா குமுதா அவர்களும், மக்கள் நினைவுத் தூபிக்கான ஈகைச்சுடரினை மாவீரர் லெப்.செந்தில் அவர்களின் சகோதரர் திரு. யசோதரன் அவர்களும் ஏற்றி வைத்தனர்.
மாதாந்த நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் மாதங்களில் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது, மாதாந்தம் நடைபெறவுள்ள மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும், உணர்வோடும், உரிமையோடும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக உறுதி ஏற்புடன், தேசியக் கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வு நிறைவுபெற்றது.
“நன்றி”
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”