ஊழல் மோசடி விசாரணைகளையடுத்து வடமாகாண அமைச்சர்கள் இருவரை பதவி நீக்கி, விசாரணைகளை தொடாந்தும் முன்னெடுக்கும் வகையில் மேலும் இரு அமைச்சர்களை ஒரு மாத விடுமுறையில் இருக்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியமைக்கு எதிராக அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நேற்றைய தினம் தமிழரசுக்கட்சி அவசர அவசரமாக தீர்மானம் எடுத்து நடவடிக்கையில் இறங்கி இருந்தது.
ஆனால் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டது போல நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவாக போதிய உறுப்பினர்களின் ஓப்பதை பெறமுடியவில்லை என்றும் 15 உறுப்பினர்களே இதுவரை ஒப்பம் இட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. 20 உறுப்பினர்களுக்கு மேல் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக ஒப்பம் இட்டுள்ளதாக ஊடகங்களுக்கு தகவல் கசிய விடப்பட்ட போதிலும் உண்மையில் இருவர் வெளிநாட்டில் இருப்பதாலும் எதிர்பார்க்கப்பட்டது போல றிசாத் பதியூர்த்தீனின் ஆதரவாளர்களிடம் இருந்து ஒப்பம் இதுவரை பெறப்படாமையாலும் 15 உறுப்பினர்களின் ஒப்பம் மட்டுமே பெறப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பிரேரணைக்கு ஆதரவாக செயற்படுவதாக றிசாத் பதியூர்த்தீன் கூறியிருந்தாலும் ஒழுக்க முறைமைகளை எதிரான வகையில் கொண்டுவரப்படும் இந்த நம்பிக்கை இல்ல பிரேரணைக்கு ஆதரவாக செயற்பட றிசாத் பதியூர்த்தீன் தயங்குவதாக தெரியவருகிறது. இதனால் றிசாத் பதியூர்த்தீனை தமக்கு ஆதரவாக செயற்பட வைக்கும் முயற்சிகளில் நேற்று மாலை வரை தமிழரசுக்கட்சியின் தலைமை தீவிரமாக ஈடுபட்டிருந்தது.
இதேவேளை, ஒருவேளை தேவையான 19 உறுப்பினர்களின் ஒப்பங்களை பெற்று நம்பிக்கை இல்ல பிரேரணையை கொண்டுவருமாறு ஆளுநரை வலியுறுத்தினாலும், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து அந்த நகர்வை முதலமைச்சரால் முறியடிக்க முடியும் என்பதால் எவ்வாறு முதலமைச்சருக்கு எதிராக முன்வைத்த காலை தந்திரமாக பின்னுக்கு எடுப்பது என்று தமிழரசுக்கட்சி தலைமை சிந்திக்க ஆரம்பித்திருக்கிறது.
ஊழலுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றை எடுத்தமை காரணமாக முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவருவது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது என்று அரசையலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் கீழ் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் நிலைமை காணப்படுகிறது.
இதேவேளை தமிழரசுக்கட்சியின் கடும் மிரட்டலுக்கு மத்தியிலும் வடக்கு மாகாண சபையில் நீதியை நிலை நாட்டியுள்ள விக்னேஸ்வரனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.என்னதான் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டாலும் நீதிமானும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான விக்னேஸ்வரன் நீதியை நிலை நாட்டுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தமிழ் மக்களிடம் இருந்தது. அந்த நம்பிக்கையைத்தான் நேற்று புதன்கிழமை வடக்கு மாகாண சபையில் விக்னேஸ்வரன் காப்பாற்றி நீதியை நிலை நாட்டி உள்ளார்.
தான் ஒரு பனங்காட்டு நரி என்பதனை தமிழரசுக்கட்சியின் குள்ள நரிகளுக்கு தனது நீதி வழுவாத நடவடிக்கை மூலம் மீண்டும் விக்னேஸ்வரன் உணர்த்தியுள்ளார்.
முதலமைச்சருக்கு எதிரான இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் பிழையானதும் காலத்துக்கு பொருத்தம் அற்றதும் என்று குறிப்பிட்டிருக்கும் மூத்த ஊடகவியலாளரும் தின்னக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான தனபாலசிங்கம் இந்த பிரேரணையை கொண்டு வருபவர்களின் தமிழ் மக்களுக்கான செய்தி என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.