இலங்கையில் முன்னாள் போராளிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழு உறுப்பினர் யுஜி இவசவா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான மீளாய்வு கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட தொடர்பாடல் பொறிமுறைமை குறிப்பாக நடவடிக்கைகளுக்கு பின்னரான பின்னூட்டல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை. தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் மற்றும் அந்தரங்க உரிமை ஆகியன தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா?
தேசிய செயற்திட்டமொன்றின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பிலான விபரங்களை வெளியிட வேண்டும். முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்த போதிலும், முன்னாள் போராளிகள் கண்காணிக்கப்படுவதுடன், அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்