மெடிற்றரேனியன் கடலில் சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 764 அகதிகளுடன் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதில் 23 பேரின் சடலங்களும் இருந்ததாக இத்தாலிய கடலோரக் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மத்திய மெடிற்றரேனியன் கடலில் நேற்று அதிகாலையில் இந்தக் கடினமான மீட்புப்பணி இடம்பெற்றதாக இத்தாலிய கடலோரக் காவல்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆறு மீட்பு நடவடிக்கைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் மூலம், 764 குடியேற்றவாசிகள் பாதுகாப்பாக கப்பலில் இருந்து மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்தாலியை நோக்கிச் சென்று கொண்டிருந்த 764 குடியேற்றவாசிகள் இத்தாலிய கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டு, டிசியோற்றி என்ற கப்பலின் மூலம், தென்பகுதி துறைமுகமான ரெக்கியோ கலாப்ரியாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
இந்தக் கப்பலில் 8 பேரின் சடலங்களும் கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
படகில் இருந்து மீட்கப்பட்ட குடியேற்றவாசிகள், சிறிலங்கா, சகாரா, பாகிஸ்தான், சிரியா, ஜோர்தான், ஏமன், மொராக்கோ, நேபாளம், அல்ஜீரியா, எகிப்து, பங்களாதேஷ், லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இத்தாலிய கடலோரக் காவல்படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.