ஐரோப்பிய கண்டத்தில் நடத்தப்படும் மிகப்பெரிய கால்பந்து தொடர் யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தொடர் ஸ்பெயினில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் இங்கிலாந்து- ரஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியை காண இருநாடுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்தனர். போட்டி நடைபெற்ற மார்ஸைல் மைதானம் ரசிகர்களின் கூக்குரலால் அலறியது.
ஆட்டம் தொடங்கியது முதலே இருநாட்டு ரசிகர்களும் ஆரவாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் டியர் இங்கிலாந்து அணிக்காக கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது இங்கிலாந்து ரசிகர்களை விட அதிக அளவில் இருந்த ரஷியாவின் ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் பொறுமையாக ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தன. 90 நிமிடங்கள் முடிந்து கூடுதல் நேரத்தில் (காயங்களால் வீணான நேரம்) அதாவது 92-வது நிமிடத்தில் ரஷியாவின் பெரேசுட்ஸ்கி கோல் அடித்தார்.
இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனால் ரஷிய ரசிகர்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். உடனே, ஆட்டம் முடிப்பதற்கான விசில் ஊதப்பட்டது. அப்போது இரண்டு நாட்டு ரசிகர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ரஷியாவின் ரசிகர்கள் இங்கிலாந்து ரசிகர்களை அடித்து உதைத்து துவம்சம் செய்தனர். அவர்களை கேலரியில் இருந்து மிதித்து தள்ளி தாக்கினார்கள். அத்துடன் மைதானத்திற்கு வெளியேயும் மோதல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட இங்கிலாந்து ரசிகர்கள் பலத்த காயம் அடைந்தனர்.