என்னை சிலர் தேச தூரோகி , புலி என்றும் உங்களால் வெற்றி பெறவே முடியாது, நீங்கள் அரசியலிருந்து ஒதுங்குங்கள் என்றும் கூறினர். ஆனால் நான் வெற்றி பெற்று காட்டினேன். தற்போது ஊடங்களுக்கு பூரண சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். ஆனாலும் ஊடகங்கள் பழைய யுகத்தை நோக்கி பயணிக்கவே முனைகின்றன. அந்த பயணத்தையே நீங்கள் விரும்பினால் அதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம் .ஊடக சுதந்திரத்திற்காக அரசாங்கமே போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு ஊடகவியலாளர்களை தமிழர்கள் என்று ஒதுக்கினாலும் பிரகீத் எக்னலியகொட என்ன தவறு செய்தார்? அவரையும் விடுதலை புலி என்றே கூறினர். இதற்கு என்ன செய்வது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு லக்ஷமன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு ஸ்ரீ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,
தகவல் அறியும் சட்டமூலம் நிறைவேற்றப்பட தயாராக இருக்கும் தருணத்திலேயே இம்முறை சர்வதேச பத்திரிகை தினத்தை கொண்டாடுகின்றோம். 2003 ஆம் ஆண்டு எனது ஆட்சியின் போது தகவல் அறியும் சட்டமூலம் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் என்னால் முடியவில்லை. ஊடகங்களின் சுதந்திரத்திற்காக நான் செயற்பட்ட போது சில ஊடகவியலாளர்கள் உங்களால் ஆட்சி அமைக்க முடியாது. நீங்கள் அரசியலிருந்து ஒதுங்குங்கள் என்று கூறினர். அதேபோன்று என்னை தேசதுரோகி , புலி கூறாத எந்த பத்திரிகையாவது இலங்கையில் உள்ளதா? ஆனாலும் இதற்கு செவிமடுத்து நான் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும். ஆனால் பொறுமையாக இருந்து வெற்றிப்பெற்று காண்பித்தேன்.
தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து தகவல் அறியும் சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு பிரதமராக எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசாங்கத்தின் தரப்பினால் ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம்.
தற்போது புதிய அரசியலமைப்பிற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். இதன்போது அடிப்படை உரிமை பலப்படுத்தப்படும். இதன்போது ஊடக சுதந்திரமும் பலப்படுத்தப்படும். இதற்கான நியமிக்கப்பட்ட அரசிலமைப்பு பேரவை தொடர்பில் நடவடிக்கை குழு இன்றைய தினம் (நேற்று) கூடவுள்ளது. அரசியலமைப்பு நடவடிக்கைகளின் போது ஊடகங்கள் உரியவகையில் பங்களிப்பு செய்ய வேண்டும். மக்களுக்கு விசுவாசமான முறையில் ஊடகங்கள் செயற்பட வேண்டும். ஆனாலும் மீள யுத்தமொன்றை ஏற்படுத்துவதற்கே முனைகின்றனர். இருந்தபோதிலும் என்னுடைய தகவல்களை ஊடகங்களினால் பெறமுடியாது.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உரையாற்றும் போது யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் பலர் கொல்லப்பட்டனர். ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டதாக கூறினார். ஆனாலும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி வந்தவுடன் அவ்வாறான செயல்கள் இடம்பெறவில்லை. உதயன் பத்திரிகை நிறுவனம் தீயிட்டு கொழுத்தப்பட்டது. ஊடக சுதந்திரத்திற்காகவே உதயன் பத்திரிகை செயற்பட்டது.
ஆனாலும் வடக்கு ஊடகவியலாளர்களை தமிழர்கள் என்று நாம் புறந்தள்ளி விடுவதாக வைத்துக்கொள்வோம். அவ்வாறு பிரித்து செயற்படுவதுதானே ஊடகங்களில் செயற்பாடு.? அவ்வாறே நாமும் செயற்பட்டாலும் அப்படியானால் பிரகீத் எக்னலியகொடவிற்கு என்ன நடந்தது? அவரை புலிகள் என்றே கூறினர். அவ்வாறு சிங்கள ஊடகங்களே கூறின. பிரகீத் எக்னலிகொட உண்மைக்காக செயற்பட்டவராகும். எனினும் பிரகீத் எக்னலிகொட பற்றி பேசும் போது இராணுவத்தை காட்டிகொடுப்பதாக கூறினர்.
அத்துடன் தற்போது சிங்கள ஊடகங்கள் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தலைதூக்கியுள்ளதாக கூறி வருகின்றன. எனினும் எனக்கு தெரிந்த வகையில் புலிகள் அழித்தொழிக்கப்பட்டு விட்டனர். இருந்தபோதிலும் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்த போது புலிகள் இயக்கம் இனிமேல் தலைதூக்காது என்றே கூறினர்.
ஆனாலும் இதனுடன் சில அரசியல் குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. துட்டகை முனு என்று தன்னை அடையாளப்படுத்த கூடிய மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலும் விடுதலை புலிகள் இயக்கம் இருந்தது. அந்த அரசன் விடுதலை புலிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அரசருக்கு விடுதலை புலிகளுடன் ஒப்பந்தம் செய்ய முடியும்.
எவ்வாறாயினும் ஊடக சுதந்திரத்திற்கு நாம் தயாராகவே உள்ளோம். ஆனாலும் ஊடங்கள் பழைய யுகத்தை நோக்கி பயணிக்கவே முனைகின்றன. அந்த பயணத்தையே நீங்கள் விரும்பினால் அதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம் . அதற்காக எம்மால காலை முதல் மாலை வரைக்கும் செயற்பட முடியும்.அதேபோன்று ஹிட்லரின் காலத்தின் பின்னர் ஜனநாயகவாதிகளுக்கு சுதந்திரமாக செயற்பட முடியாது என்ற சட்டம் உள்ளடக்கப்பட்டது. அதனை இலங்கை அரசியலமைப்பில உள்ளடக்க முடியும்.
இந்நிலையில் தற்போது ஊடக சுதந்திரத்திற்காக ஊடகங்கள் செயற்படுவதாக தெரியவில்லை. அதற்கு மாறாக அரசாங்கமே ஊடக சுதந்திரத்திற்காக போராடி வருகின்றது. இவ்வாறு அரசாங்கம் ஊடக சுதந்திரத்திற்காக போராடும் நாடு எங்காவது உள்ளதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.