ஸ்ரீலங்காவால் திட்டமிட்டு கொல்லப்படும் தமிழ்!


ஸ்ரீலங்காவில் தமிழ் மொழி அரச கரும மொழியாக காணப்படுகிறதே தவிர நடைமுறையில் அவ்வாறு இல்லை என பலராலும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

மத்திய அரசால் தமிழ் மொழில் வெளியிடப்படுகின்ற உத்தியோகபூர்வ அறிவிப்புகள், மற்றும் அரச திணைக்களங்கள், அலுவலகங்களின் பெயர் பலகைகள் என எல்லா இடங்களிலும் மிக மோசமான தமிழ் மொழி தவறுகள் காணப்படுகிறது.

நாட்டின் தெற்கு பகுதிகளில் சட்டத்திற்காக மும்மொழிகளிலும் அறிவிப்புகள் பெயர்பலகைள் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ் மொழியை பயன்படுத்துகின்றார்களே தவிர, அங்கு எழுதப்பட்டிருக்கின்ற தமிழ் மொழியில் இருந்து எந்த அர்த்தத்தையும் எந்தத் தமிழராலும் பெற்றுக்கொள்ள முடியாது.

தெற்கில்தான் அப்படியென்றால் வடக்கிலும் அரச திணைக்களங்களின் பெயர் பலகையில் மிக மோசமான தமிழ் பிழைகள் சமீபகாலமாக காணப்படுகிறன. அதற்கான அண்மைய உதாரணம் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் பெயர் பலகையில் காணப்பட்ட தமிழ் பிழை.( இது தற்போது பத்திரிகைகளில் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்பட்டுள்ளது)

மேலும் தற்போதும் கூட கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்குமான் போக்கு வரத்தில் ஈடுப்படுகின்ற குளிரூட்டப்பட்ட புகையிரதத்தில் முதலாம் வகுப்புக்கு ஓதுக்கப்பட்ட ஆசனம் என்பதற்கு பதிலாக முதலாம் கடுப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனம் என எழுதப்பட்டிருக்கிறது.

இதனை தவிர பேரூந்துகளின் அறிவிப்புகள், மற்றும் நாட்டின் தலைநகரத்தை கூட கொழும்பு என்பதற்கு பதிலாக ஒரு பேரூந்தில் சொழும்பு என எழுதப்பட்டிருக்கிறது.

மேலும் கையடக்க தொலைபேசிக்கான மீள் நிரப்பும் அட்டை, மலசல கூடம், என எல்லா இடங்களிலும் தமிழ் பிழை தாராளமாக காணப்படுகிறது.

இது திட்டமிட்டு செய்யப்படுகிறதா? அல்லது தெரியாது செய்யப்படுகிறதா? வடக்கில் உள்ள அரச திணைக்களங்களில் பெயர்ப் பலகையில் கூட மிக மோசமான தமிழ் பிழைகள் காணப்படுகின்ற போது கூட அங்கு பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு அதனை பத்திரிகையில் சுட்டிக்காட்டும் வரைக்கும் எவ்வாறு தெரியாது இருந்தது?

நாட்டில் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைபாட்டுக்கு என தனியான அமைச்சு அதற்கு திணைக்களங்கள் அந்த திணைக்களங்கள் மாவட்ட மாகாண மட்டங்களில் என காணப்படுகிறது. இருந்தும் தமிழ் மொழி தவறுகளும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறன.

இலங்கையில் தமிழ் மொழி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இங்கு தரப்பட்டுள்ள படங்கள் சான்றுபகர்கின்றன

மு.தமிழ்ச்செல்வன்

இனக்கொலைதமிழ்க்கொலைதமிழ்மொழிமொழிக்கொலைஸ்ரீலங்காவில் தமிழ்
Comments (0)
Add Comment