சம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டொல்பின்ஸ் அணியை வீழ்த்தியது. பெங்களூரில் நேற்று 8வது லீக் ஆட்டத்தில் (பிரிவு ஏ) சென்னை சூப்பர் கிங்ஸ்- டொல்பின்ஸ் (தென் ஆப்பிரிக்கா) அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற டொல்பின்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனையடுத்து சென்னை அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய வெய்ன் சுமித் 7 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தாலும், 2வது விக்கெட் ஜோடியான பிரன்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா ஆகியோர் அதிரடி காட்டினார்கள்.
சுரேஷ் ரெய்னாவை கட்டுப்படுத்த முடியாமல் டொல்பின்ஸ் வீரர்கள் தடுமாறினார்கள். பிரன்டன் மெக்கல்லம் 29 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
நிலைத்து நின்று ரசிகர்களுக்கு விருந்து படைத்த சுரேஷ் ரெய்னா சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் பிரைலிங் பந்து வீச்சில் அவுட் ஆனார். சுரேஷ் ரெய்னா 43 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சருடன் 90 ஓட்டங்கள் குவித்தார்.
சென்னை அணித்தலைவர் டோனி டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். டுபிளிஸ்சிஸ் 30 ஓட்டங்களும், வெய்ன் பிராவோ 11 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 242 ஓட்டங்கள் குவித்தது. இறுதியில் ரவீந்திர ஜடேஜா 40 ஓட்டங்களுடனும் (15 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன்) அஸ்வின் 4 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
பின்னர் 243 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய டொல்பின்ஸ் அணியும் ஆரம்பத்தில் அதிரடி காட்டியது. 2.3 ஓவர்களில் 50 ஓட்டங்களை எட்டிய அந்த அணி 8.5 ஓவர்களில் 100 ஓட்டங்களை கடந்தது.
அதன் பின்னர் விக்கெட்டுகள் வீழ்ந்ததால் அந்த அணியின் அதிரடி ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. இதனால் 20 ஓவர்களில் டொல்பின்ஸ் அணி 188 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது ஆட்டத்தில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.