Designed by Iniyas LTD
இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக ராஜிநாமா
பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்துள்ளனர்.இதையடுத்து, அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மேலும் முற்றியுள்ளது.
பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வலியுறுத்தி தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியும், மத குரு தாஹிருல் காத்ரியின் அவாமி தெஹ்ரிக் கட்சியும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அந்நாட்டு நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் புதன்கிழமை முதல் முற்றுகையிட்டுள்ளனர்.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அரசு நடத்திய பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதாக இம்ரான் கான் வியாழக்கிழமை அறிவித்தார். இறுதி வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறினார்.
இந்நிலையில், அவரது தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த 34 எம்.பி.க்களும் பதவி விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஷா மெஹ்மூத் குரேஷி, ஆரிஃப் ஆல்வி ஆகிய இருவரும், கட்சித் தலைவர் இம்ரான் கான் உள்ளிட்ட 34 பேரின் ராஜிநாமா கடிதங்களை நாடாளுமன்ற அவைத் தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பித்தனர்.
கடிதங்களை சமர்ப்பித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய குரேஷி, “”2013-இல் நடைபெற்ற தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை.
இந்தப் போராட்டத்தை நாட்டின் அரசியல் சாசனத்துக்குட்பட்டே நடத்துவோம்.
விரைவில், அனைத்து பெரிய நகரங்களிலும் தர்னா போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
நாடாளுமன்றத்தில் இம்ரானின் கட்சி மூன்றாவது தனிப்பெரும் கட்சியாகும். எனினும், 342 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 190 உறுப்பினர்களின் ஆதரவு நவாஸ் ஷெரீஃபுக்கு இருப்பதால், இந்த ராஜிநாமாவால் அவரது ஆட்சிக்கு ஆபத்து இல்லை எனக் கூறப்படுகிறது.