Designed by Iniyas LTD
சூரிச்சில் கண்காட்சிக்காக பாரம்பரிய உணவு வகைகள்
சூரிச்சில் அமைந்துள்ள அருள்மிகு சிவன் கோவிலினை பரிபாலனம் செய்து வரும் சைவத் தமிழ்ச் சங்கத்தினால் ஆலய கட்டடக் கொள்வனவு நிதிக்காக 08.05.2016 அன்று மிகப்பிரமாண்டமாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வு சூரிச் ஒபர்கிளாட்டில் நடைபெற்றது.

இங்குவாழும் இளவயதினர்க்கும், இங்கு நீண்டகாலமாக வாழ்ந்து வருபவர்களுக்கும், பாரம்பரிய உணவு வகைகளை அறிமுகம் செய்யும் முகமாகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட இக்கண்காட்சியாக இது அமைந்தது. தென்னம் ஓலைகளால் வடிவமைக்கப்பட்ட தனித்தனி கூடாரங்களில் பழவகைகள், கிழங்குவகைகள், கஞ்சிவகைகள், கூழ்வகைகள், கறிகள், சிற்றுண்டிகள் என வகைப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அங்காங்கே நின்று சுவைக்க கூடியவாறு இருக்கைகள் ஒழுங்குபடுத்தப்பட்டது. இவையனைத்தும் சைவத் தமிழ்ச் சங்க தொண்டர்களது பல மணிநேர உழைப்பின் கடினத்தினை வெளிப்படுத்தியிருந்தது. நாம் அறிந்த உணவுகளே, வேறு மாவட்டங்கள், கிராமங்களில் அதே உணவின் ருசி வேறுவிதமாக அமைந்திருக்கும். அவற்றின் தன்மையினை புசித்து அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக இவ் உணவுக் கண்காட்சி அமைந்திருந்தது.
அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஈச்சம் பழம் முதல் அனைத்து பழங்கள், நுங்கு, இளநீர் போன்ற அனைத்தினையும் உண்டும் பருகி மகிழ்ந்தனர். இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக மதிப்பிற்க்குரிய சங்கீத பூசணம், திரு.சி.பத்மலிங்கம் அவர்கள் சமூகமளித்திருந்தார் அவர் முன்னிலையில் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. அத்துடன் தாயக இளம் இசையமைப்பாளர் இசைப்பிரியன் குழுவினரால் நடாத்தப்பட்ட இசைநிகழ்வில் சுவிஸ்வாழ் இளம் முன்னணிக் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டு பாடல்களைப் பாடியிருந்தனர். தென்னிந்திய முன்னனி இசையமைப்பாளர்களுக்கு நிகராக ரசிகர்களுக்கு இன்னிசை விருந்தினை அள்ளி வழங்கியிருந்தனர். சுவிசின் இளம் நாதஸ்வரக் கலைஞர் வர்ஜான் கலைச்செல்வன் நாதஸ்வரத்தினால் அமுதகானம் பொழிந்து அரங்கத்தை கானமழையில் நனைய வைத்தார்.
இசைப்பிரியனின் இசையில் பல பாடல்களை வாசித்து சிறப்பித்திருந்தார்கள். மேலும் சூப்பர் சிங்கர் புகழ் நிருஜன் அவர்கள் தன் சிம்மக் குரலால் அரங்கத்தை அதிரவைத்து, தன் திறமையினை மீண்டும் நிருபித்தது ஈழத் தமிழர்களை பிரமிக்க வைத்தது. சைவத் தமிழ்ச் சங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் மேலும் திருக்கோணேஸ்வரர் நடனாலய மாணவர்கள், ராதா நடனாலய மாணவர்கள் போன்றோரின் நடன நிகழ்வும், சொலத்தூண் தமிழர் நலன்புரிச் சங்கத்தால் இவ்வாண்டு நடாத்தப்பட்ட இசைக்குயிலில் வரலாறு எனும் தலைப்பில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற இசைக்கல்லூரி மாணவர்களின் இசைநிகழ்வும் நடைபெற்றது.
