Designed by Iniyas LTD
தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை: 70 படகுகளின் வலைகளை அறுத்து அட்டூழியம்
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை கற்களைக் கொண்டு தாக்கியும், படகுகளை மூழ்கடித்தும், வலைகளை அறுத்தும் இலங்கை கடற்படை அட்டூழியம் செய்துள்ளது.
மீனவர்கள் கூட்டமைப்புத் தலைவர் பி. சேசுராஜா இது குறித்து தெரிவிக்கையில், 70 படகுகளில் இருந்த மீன் வலைகளை இலங்கை கடற்படையினர் அறுத்துள்ளனர். மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது கற்களையும் பாட்டில்களையும் வீசி தாக்கியதில், சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரை திரும்பியுள்ளனர் என்றார்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் சில படகுகள் பலத்த சேதமடைந்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு கடற்கரைப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 437 இயந்திரப் படகுகளில் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்கியுள்ளனர்.
அப்போது, ஒரு படகு இரண்டாக உடைந்து தண்ணீரில் மூழ்கியது. அதில் இருந்த 5 மீனவர்கள் கடலில் தத்தளித்த நிலையில், மற்றொரு மீனவர்களின் படகில் ஏறி கரை சேர்ந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.