Designed by Iniyas LTD
மக்களை சொந்த இடத்தில் விட்டால் மட்டும்போதாது! அவர்களின் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்துவதே மீள்குடியேற்றம்
யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் என்பது சொந்த ஊரில் கொண்டு சென்று விடுவது மட்டுமானது அல்ல முழுமையான மீள்குடியேற்றம் அவர்களின் நிரந்தர இருப்பிடத்துடன் கூடிய வாழ்வாதாரத்தினையும் ஏற்படுத்துவதே என யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வலி. வடக்கு ஊறணிப் பகுதியில் இப் பகுதி மீனவர்களின் வாழ்வாதார நன்மைகருதி மீனவ இறங்குதுறை ஒன்றை நேற்றைய தினம் விடுவித்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் உண்மையான மீள் குடியேற்றம் என்பது சொந்த ஊரில் கொண்டு சென்று விடுவது மட்டுமானது அல்ல . முழுமையான மீள்குடியேற்றம் அவர்களின் நிரந்தர இருப்பிடத்துடன் கூடிய வாழ்வாதாரத்தினையும் ஏற்படுத்திக் கொடுப்பதேயாகும். அது இப்பகுதி மக்களிற்கு இன்றுதான் ஆரம்பிக்கின்றது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அந்தப் பழமொழியானது இப்பகுதி மக்களிற்கு இன்றுதான் பொருந்தியுள்ளது. இன்று இப்பகுதி இறங்குதுறை மக்கள் பயன்பாட்டிற்கு கிடைத்துள்ளது. இது மேலும் தொடரும். காலப்போக்கில் ஏனையவையும் பெறலாம்.இன்று இவ் இறங்குதுறை கிடைப்பதற்கு தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதியும் ஓர் முக்கிய காரணம்.
இதேவேளை இங்கிருந்த இறங்குதுறைகளைவிடவும் அண்டிய பகுதியே விடுவிக்கப்பட்டுள்ளதனால் இப் பகுதிகளில் அதிக கற்கள் இருக்கின்ற காரணத்தினால் படகுகள் சென்றுவர முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள கற்கள் விரைவில் கடற்படையினரின் உதவியுடன் அகற்றப்படும். என்றார்.