தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அகில இலங்கை சைவ மகா சபையால் யாழில் இராவணேசுவரம் ஆலயம் நிர்மாணிப்பு..

அகில இலங்கை சைவ மகா சபையால் யாழ் – காரைநகர் வீதியில், பொன்னாலை சந்திக்கு சமீபமாக மூளாய் புதிய குடியேற்றத்திட்ட பிரதேசத்தில்   இராவணேசுவரம் ஆலயம் அமைக்கப்பட்டுள்து.

ஆலயத்தின் செந்தமிழில் திருக்குடமுழுக்கு மற்றும் பசுமைத் திட்டம் தாய்மண் 2020 நிகழ்வு என்பன இன்று (21) திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

ஈழத்தை ஆட்சிசெய்த தமிழ் மன்னனான சிவபக்தன் இராவணேசுரன் சிவலிங்கத்தை தாங்கி நிற்பதைப் போன்று சைவத்தமிழ் திருக்கோயிலாக இவ் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

உயிர்மெய் எழுத்துக்கள் பன்னிரண்டு போன்று  பன்னிரு படிக்கட்டுக்களால் அமைக்கப்பட்ட உயர் பீடத்தில் சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சம் ஆகும்.

அதோடு செந்தமிழுக்கு முதலாவது தமிழ் இலக்கண நூலான அகத்தியம் தந்த திருமூலர் மற்றும் திருமந்திரம் தந்த திருமூலர் ஆகியோரின் திருவுருவச் சிலைகள் ஆலயத்தில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன.

மேலும், உமை அம்மை சமேத சிவபெருமான், விநாயகர், செந்தமிழ்க் கடவுள் முருகன் ஆகியோரின் விக்கிரகங்களும் வழிபாடாற்றுவதற்கு ஏற்ற விதத்தில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன.

கோவிலின் முன்னே காவல் தெய்வமாக பைரவர் பிரதிக்ஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த தமிழ் மன்னனான இராவணேசுவரனை சில நூல்கள் தவறான வழியில் அரக்கனாக சித்திரித்திருக்கின்றன.

ஈழத்தை சிவபூமி என அழைப்பதற்கு வழியேற்படுத்திய தமிழ்ப் பற்றாளன், ஈழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிவலிங்கங்களைத் தாபித்த சிவ பக்தன், பெண்மைக்கு மதிப்பளித்த மாவீரன், தாயன்புக்கு பாத்திரமான தனயன், இவ்வாறு பல்வேறு சிறப்புக்கள் பொருந்திய இராவணேசுவரனுக்கான ஒரேயொரு ஆலயமாக மூளாய் இராவணேசுவரம் வரலாற்றில் பதிவுபெற்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...