Designed by Iniyas LTD
அமெரிக்காவைத் தலையிடக் கோரி காணாமல் போனோர் கையெழுத்துப் போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு இலங்கையில் நீதி கிடைக்காத நிலையில் அமெரிக்கா இந்த விடயத்தில் தலையிடவேண்டும். எனக்கோரி வவுனியாவில் தொடா்ச்சியான போராட்டங்களை நடாத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கையெழுத்து போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளனா்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தமிழா் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கிருஸ்ணன் ராஜ்குமார் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மாசி மாதம் எமது சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தின் 2 வருட பூர்த்தி வரும் நாளில் எமது கையெழுத்து சேகரிப்பை ஆரம்பிக்கவுள்ளோம்.
காணாமற் போன பிள்ளைகளை கண்டுபிடிக்க உதவுவதற்கு, அமெரிக்கா மட்டுமே காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடிக்க சிறந்த அறிவாற்றல் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது, சிறந்த உபகரணங்களைக் கொண்டுள்ளது, பல கஷ்டமான இடங்களை அடைவதற்கு போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ளது.
அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் உலகத் தலைவர்கள். அவர்களை நாம் கேட்டுக் கொண்டால், நிச்சயமாக அவர்கள் இங்கே வருவார்கள். அவர்கள் உலகில் மிக சக்தி மிக்கவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் இல்லாமல் இந்த உலகில் எதுவும் அசையாது மட்டுமல்ல ஒன்றுமே நடக்காது. அவர்கள் மனித உரிமை ஆதரவாளர்கள்.
வடக்கில் எமது பெரும்பான்மையை இழக்க நேரிடும், சிங்கள அரசாங்கத்தால் அழிக்கப்படுகிறோம். கிழக்கில் தமிழர்கள் முஸ்லீம்களாக மாற்றப்படுகிறார்கள், சிங்கள குடியேற்றங்கள் நடந்து வருகின்றன, சிங்கள புத்த அடையாளங்கள் தமிழ் தாயகத்தில் பரவி வருகிறது. எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பணம் மற்றும் சலுகைகளுக்கு விலைபோகியுள்ளனர்“ என தெரிவித்துள்ளார்.


