Designed by Iniyas LTD
இங்கிலாந்து – பாகிஸ்தான் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்!
மிஸ்பா உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு லண்டனில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆமிரும், முகமது ஆசிப்பும் அப்போதைய கேப்டன் சல்மான்பட்டின் அறிவுரையின் படி வேண்டுமேன்றே ‘நோ-பால்’ வீசி சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்த இவர்கள் 3 பேரும் கிரிக்கெட் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.
அந்த சூதாட்ட சர்ச்சைக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் முதல் இங்கிலாந்து பயணம் இது தான். தடை முடிந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் மறுபடியும் பாகிஸ்தான் அணிக்கு திரும்பி இருக்கிறார். ஆனால் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு ஆயுட்கால தடை விதிக்க வேண்டும் என்று அலஸ்டயர் குக் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் அடிக்கடி வலியுறுத்துகிறார்கள். இதனால் இந்த தொடரின் போது 24 வயதான முகமது அமிரை அவர்கள் சீண்டுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் ரசிகர்களும் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பக்கூடும். இவற்றை எல்லாம் முகமது அமிர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்ற ஆவல் உருவாகியுள்ளது.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் கூறுகையில், ‘இங்கிலாந்து வீரர்கள் வார்த்தை ஜாலத்தால் வம்புக்கு இழுத்தால் நாங்கள் பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம்’ என்றார். மேலும் அவர், ‘இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் தான் முதுகெலும்பு. அவரை சீக்கிரம் வீழ்த்தி விட்டால் அதன் பிறகு நெருக்கடி கொடுக்க முடியும். முகமது அமிர் புத்திசாலித்தனமான பவுலர். மனவலிமை மிக்கவர். சாதிக்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார்’ என்றார்.
இங்கிலாந்து அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் காயத்தால் விலகியிருப்பது சற்று பலவீனமாகும். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜாக் பால் அறிமுக வீரராக இந்த டெஸ்டில் விளையாட இருப்பதாக அந்த அணியின் கேப்டன் அலஸ்டயர் குக் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
இங்கிலாந்து அணி உள்ளூரில் எப்போதும் அபாயகரமானது. சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதே உத்வேகத்துடன் பாகிஸ்தானையும் புரட்டியெடுக்க முயற்சிப்பார்கள். பாகிஸ்தான் கேப்டன் 42 வயதான மிஸ்பா உல்-ஹக் இந்த தொடருடன் ஓய்வு பெற வாய்ப்புள்ளது. அதனால் தொடரை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதில் தீவிர முனைப்பு காட்டுவார்.
இவ்விரு அணிகளும் இதுவரை 77 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 22-ல் இங்கிலாந்தும், 18-ல் பாகிஸ்தானும் வெற்றி கண்டன. 37 டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இங்கிலாந்து: அலஸ்டயர் குக் (கேப்டன்), அலெக்ஸ் ஹாலஸ், ஜோ ரூட், ஜேம்ஸ் வின்சி, கேரி பேலன்ஸ், ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் பால், ஸ்டீவன் பின்.
பாகிஸ்தான்: முகமது ஹபீஸ், ஷான் மசூத், அசார் அலி, யூனிஸ்கான், மிஸ்பா உல்-ஹக் (கேப்டன்), ஆசாத் ஷபிக், சர்ப்ராஸ் அகமது, வஹாப் ரியாஸ், முகமது அமிர், ரஹத் அலி அல்லது இம்ரான் கான், யாசிர் ஷா.
இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.