Designed by Iniyas LTD
இத்லிப் நகரில் அதிகாலையில் ரஷிய போர் விமானங்கள் ஆக்ரோஷமாக குண்டுவீச்சு
சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வந்தது. இதில் 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்கா, ரஷியாவின் கூட்டு முயற்சியில் கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி முதல் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இருந்தபோதும், அங்கு அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற அல்நுஸ்ரா முன்னணியினர் ஆதிக்கம் செலுத்தி வருகிற பகுதிகளில் இந்த சண்டை நிறுத்தம் கிடையாது. இந்த நிலையில், அந்த அல்நுஸ்ரா முன்னணியினர் வசம் உள்ள இத்லிப் மாகாணத்தின் தலைநகரான இத்லிப் நகரில், அவர்களை குறிவைத்து நேற்று அதிகாலையில் ரஷிய போர் விமானங்கள் ஆக்ரோஷமாக குண்டுவீச்சு நடத்தின. இந்த குண்டுவீச்சில் அப்பாவி பொதுமக்கள் 23 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
சிரியாவில் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தபின்னர் நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்தாக்குதல் இதுதான் என மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகத்தின் தலைவர் ரமி அப்துல் கூறினார். இதற்கிடையே ரஷியா நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 200 பேர் படுகாயம் அடைந்ததாகவும் துருக்கி கூறி உள்ளது.