Designed by Iniyas LTD
இந்தியா– அவுஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி
இந்தியா– அவுஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் இன்று தொடங்கியது.இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் அவுஸ்திரேலியா 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் டோனி தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என்று அறிவித்தார்.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய்யும், ஷிகர் தவானும் களம் இறங்கினார். வழக்கம் போல் ஷிகர் தவான் இன்றைய போட்டியிலும் சோபிக்கவில்லை.
இவர் 24 ஓட்டங்களில் மார்ஷ் பந்தில் கீப்பர் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய புஜாராவும் 18 ஓட்டங்களில் வெளியேறினார்.
இதையடுத்து வந்த கோஹ்லியும் ஹாசேல்வுட் பந்தில் கீப்பரிடமே கேட்ச் கொடுத்து 19 ஓட்டங்களில் வெளியேறினார்.
இந்திய அணியின் தடுப்பு சுவராக நின்று சிறப்பாக விளையாடிய முரளி விஜய் சதம் அடித்தார். இவர் 22 பவுண்டரி உட்பட 144 ஓட்டங்கள் எடுத்து லயன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
முரளி விஜய்யுடன் இணைந்த ரஹானே அரைசதம் அடித்தார். இவர் 63 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இவருடன் ரோஹித் களத்தில் இருக்கிறார்.
80 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 263 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
அவுஸ்திரேலிய தரப்பில், ஹாசேல்வுட் 2 விக்கெட்டுகளையும், மார்ஷ், லயன் தலா 1 விக்கெட்டுகளையும் எடுத்து உள்ளனர்.