Designed by Iniyas LTD
இயற்கை அனர்த்தங்களுடன் அரசின் அலட்சியத்தாலும் பாதிப்புக்குள்ளாகும் மீரியபெத்தை மக்கள்
பாரிய மண்சரிவுக்குள்ளான மீரியபெத்தையில் வாழும் மக்கள் இயற்கை அனர்த்தங்களினால் மட்டுமன்றி அரசாங்கத்தின் அலட்சியம் காரணமாகவும் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் திகதி பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை அருகேயுள்ள மீரியபெத்தையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது.
இதன் போது அப்பகுதியில் வசித்த அப்பாவிப் பொதுமக்கள் 37 பேர் உயிருடன் மண்ணுக்குள் புதையுண்டு போயினர். 64 வீடுகள் முழுமையாக மண்ணோடு மண்ணாகிப் போயிருந்தது. அதன் பின்னர் மீரியபெத்தை மக்களுக்கு பல்வேறு நிவாரணத்திட்டங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை முழுமையான நிவாரணம் எதுவும் அப்பகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தற்போது கொட்டும் மழை காரணமாக அப்பகுதியில் சில வீடுகளில் பாரிய வெடிப்புகள் உண்டாகத் தொடங்கியுள்ளன.
இங்கு வசிக்கும் மக்களை அப்பகுதியை விட்டு வேறிடங்களுக்கு குடிபெயருமாறு வற்புறுத்தும் அரசாங்க அதிகாரிகள் அதற்கான காணிகள் மற்றும் ஏற்பாடுகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர். அத்துடன் அபாய பிரதேசம் என்று தெரிவித்து தற்போது மீரியபெத்தையில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் ஏதேனும் அனர்த்தம் நிகழ்ந்தாலும் அதுகுறித்து உடனடித் தகவல்களை பரிமாறி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தடையேற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறுகுழந்தைகளுடன் பெரும் அச்சத்துக்கு மத்தியில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.