Designed by Iniyas LTD
இராணுவம் மக்களின் நிலங்களில்? மக்கள் அரச நிலங்கள் மீது ஆக்கிரமிப்பு!
மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் இருமருங்கிலும் உள்ள அரச காணிகளை, கடந்த 3 நாட்களாக சட்டவிரோதமான முறையில் பொதுமக்கள் கைப்பற்றி வந்தமை, பொலிஸாரின் தலையீட்டினால், ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை கோறளைப்பற்று வடக்கு, வாகரை, கோறளைப்பற்று தெற்கு மற்றும் கிரான் பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் காணப்பட்ட அரச காணிகளே, இவ்வாறு அத்துமீறிக் கைப்பற்றப்பட்டுவந்தன.
வாழைச்சேனை நாவலடி பிரதேசத்தில் இருந்து, புணானை பிரதேசம் வரை சுமார் 15 கிலோமீற்றர் தூரமான காணிகளே, இவ்வாறு சட்டவிரோதமான முறையில் பொதுமக்களால் சுவிகரிக்கப்பட்டன.
திடீரென, பொது மக்களால் மேற்கொள்ளப்பட்ட குறித்த நடவடிக்கைக்கு எதிராக, பிரதேசத்தின் கிராமசேவகர்களால், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்தே, அரச காணிகளுக்குள் நாட்டப்பட்ட வேலிக்கட்டைகள் மற்றும் முட்கம்பிகளை அகற்றும் நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டனர்.
இதன்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலைமையொன்றும் ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், இருத்தரப்புடன் கலந்துரையாடி நிலைமையை கட்டுப்படுத்தினார்.
இவ்விடயம் தொடர்பாக, மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளதாகவும் இப்பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வினை, அரச அதிபர், விரைவில் பெற்று தருவதாகவும் உறுதியளித்துள்ளார் என்றும் பொதுமக்களிடம் அவர் தெரிவித்தார்.

