Designed by Iniyas LTD
சிறீலங்காவிற்கு எதிராக சர்வதேச விசாரணைகள் நடத்தப்படலாம் – தயான் ஜயதிலக்க
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் நடத்தப்படலாம் என இலங்கையின் சிரேஸ்ட ராஜதந்திரிகளில் ஒருவரான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி ஒருவரின் ஊடாகவோ அல்லது ஆணைக்குழு ஒன்றின் மூலமாகவோ இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட்டு விட்டால் அதனை தடுத்து நிறுத்துவது சாத்தியமாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரும்பாலும் இந்த பொறிமுறைமைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொள்கைகளை மீறியதாக இலங்கை மீது குற்றம் சுமத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் இது ஆபத்தான நிலைமையாகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வுகளின் போது நேரடியாக இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடிய அபாயம் இல்லை என்ற போதிலும் உறுப்பு நாடுகள் தனித் தனியாக இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.