Designed by Iniyas LTD
இலங்கையில் மீண்டும் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் – இராணுவ தளபதி தெரிவிப்பு
எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் தேவை ஏற்பட்டால் பயண கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த நத்தார் காலப்பகுதியின் பின்னர் நாட்டில் கொரோனா பரவல் நிலைமை அதிகரித்துள்ளது. அவ்வாறான காலப்பகுதியில் மக்கள் சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றுவதில்லை என உறுதியாகியுள்ளதென இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இராணுவ தளபதி இதனை கூறியுள்ளார்.
டிசம்பர் நத்தார் மற்றும் அதன் பின்னர் இருந்த நீண்ட விடுமுறைகளை தொடர்ந்து ஜனவரி மாதத்திலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 2020ஆம் ஆண்டிற்கு முன்னர் நாங்கள் பழகிய முறையில் பண்டிகை கொண்டாட நினைத்தால் மாற்றங்கள் செய்ய நேரிடும்.
அத்துடன் தனிமைப்படுத்தலுக்காக அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளில் மாற்றம் ஏற்பட கூடும்.
நாடு திறக்கப்பட்டுள்ள போதிலும் சுகாதார வழிக்காட்டல்கள் சில கட்டுப்பாடுகள் உள்ளதென இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.