Designed by Iniyas LTD
இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கருணாவின் பலத்த சந்தேகம்!
வடக்கில் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதுடன், நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கருணா என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
சம்பந்தன் மற்றும் மாவைக்குப் பின்னால் சென்றால் எஞ்சியிருக்கும் தமிழ் இனத்தையும் தேடிப் பார்க்க வேண்டிய அவல நிலை ஏற்படும். அவர்கள் சூடு சுரணையில்லாமல் இந்த அரசாங்கத்துக்கு துணை போவதாக குறிப்பிட்டுள்ளார்.
பழமைவாத சுயநல அரசியல்வாதிகளை தூக்கி எறிந்து விட்டு துணிச்சல் மிக்க புதுமையான அரசியல் தலைமைகளை எமது இளைஞர் சமூகம் உருவாக்க வேண்டும்.
த.தே.கூட்டமைப்புடன் இணைந்து கொண்டு ரணில் அரசும் கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரை வார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தனியொரு மாற்று தமிழ் சக்தியாக தனித்து போட்டியிட உள்ளோம், இதில் கிழக்கு வாழ் தமிழ் மக்களை அழைக்கின்றோம், இது பதவிக்கான போராட்டம் அல்ல, இந்த போராட்டத்திற்கு வடக்கு வாழ் தமிழ் மக்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், நல்லாட்சி என்று கூறிக்கொண்டு பொய் ஆட்சி நடைபெறுகின்றது, இதன் காரணமாக நாளுக்கு நாள் அடாவடித்தனம் கூடிக்கொண்டு போகின்றது.
ஒருமாத காலப்பகுதியில் 3 துப்பாக்கிச்சூட்டு சம்வங்கள் நடைபெற்றுள்ளன. ஜே.ஆர். ஜெயவர்தன காலத்தைப்போல் தமிழர்களுக்கு எதிரான காலம், அதாவது மீண்டும் கறுப்பு ஜூலை போன்ற கலவரம் வடக்கில் வந்து விடுமோ என்று அச்சம் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கருணா தெரிவித்துள்ளார்.