Designed by Iniyas LTD
உணவுப்பஞ்சத்தால் குழந்தைகளை விற்கும் அவலம்!
தென் அமெரிக்காவில் உள்ள லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலா எண்ணெய் வளம் மிக்கது. சமீப காலமாக அங்கு பொருளாதார மந்த நிலை நிலவுகிறது, நிர்வாக சீர்கேடு, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு உள்ளிட்ட பல காரணங்களால் அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே அதிபர் பதவியில் இருந்து நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
நாட்டில் பொருளாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் பொருட்கள் உற்பத்தியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள் இயங்கவில்லை.
உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சாப்பாட்டுக்கும், குடி தண்ணீருக்கும் பொது மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். மக்களுக்கு உணவு பொருட்கள் ரேசன் முறையில் வழங்கப்படுகிறது.
அவை போதுமான அளவில் இல்லை. எனவே அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், மற்றும் வணிக வளாகங்களில் புகுந்து பொருட்களை மக்கள் சூறையாடியும் கொள்ளையடித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், உணவு பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலா நாட்டில் பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வெளியேற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தங்களது குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியாததால் பெற்றோர்கள் மற்றவர்களிடம் குழந்தைகளை விட்டு விடுகின்றனர்.
எத்தனை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வெளியே விட்டு விடுகிறார்கள் என்பது குறித்து வெனிசுலா அரசு தரப்பில் புள்ளி விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் சமூக நல குழுக்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.