Designed by Iniyas LTD
உலகளவில் பிரபலமான கானா உலகநாதனின் பாடல்!
ஆண்கள் மட்டுமே நடித்துள்ள முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையோடு உருவாகியுள்ள ‘ஆடவர்’ படத்திற்காக தஷி இசையமைப்பில் கானா உலகநாதன், டியாலோ கோபு ஆகியோர் பாடிய பாடல்கள் தமிழகத்தின் பட்டி தொட்டி மட்டும் இன்றி, உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது.
தம்பி தெய்வா மீடியாஸ் நிறுவனம் சார்பில் சொ.சிவக்குமார் பிள்ளை தயாரித்திருக்கும் படம் ‘ஆடவர்’. 75 க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் ஸ்ரீ ரஞ்சன் ஒளிப்பதிவு செய்து இயக்கும் இப்படத்தில், கேரள அரசின் விருது பெற்ற தஷி இசையமைப்பில், சொ.சிவகுமார் பிள்ளை, கலைவேந்தன் ஆகியோரது வரிகளில் உருவான இப்பாடல்களை கானா உலகநாதன், டியாலோ கோபி ஆகியோர் பாடியுள்ளனர்.
கானா உலகநாதன் பாடியுள்ள “அழகா தெரியுது சென்னை மச்சான்…” என்ற பாடல் தமிழகம் மட்டும் இன்றி, ஆஸ்திரேலியா, கனடா என்று உலகத்தில் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பிரபலமடைந்து வருகிறது. டியாலோ கோபு பாடியுள்ள மதுவுக்கு எதிரான பாடல், ரசிகர்களை ஆட்டம் போட வைப்பதுடன், சிந்தக்க செய்துள்ளது.
படம் வெளியாவதற்கு முன்பாகவே மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ள ‘ஆடவர்’ பட பாடல்களை, இசையமைப்பாளர் பரத்வாஜ், பின்னணி பாடகி பி.சுசீலா, இயக்குநர் பேரரசு, சண்டைப்பயிற்சி இயக்குநரும் கில்டு செயலாளருமான ஜாக்குவார் தங்கம், சீரடியில் உள்ள நீலகண்ட சுவாமிகள் ஆகியோர் வெளியிட்டனர்.
புதுமுகங்கள் நடித்துள்ள ‘ஆடவர்’ படத்தில் கிரண் என்ற 10 வயது சிறுவன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கும் தமிழ் அடியான் என்ற நடிகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சஸ்பென்ஸ் திரில்லரோடு சமூகத்திற்கு பயன் தரும் விஷயத்தை சொல்லியிருக்கும் ‘ஆடவர்’ விரைவில் வெளியாக உள்ளது.