தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐந்து லட்சத்திற்கு விற்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடரில் முக்கிய அணியான சென்னை சூப்பர் கிங்ஸின் மதிப்பு ரூ. 5 லட்சம் மட்டுமே என, மதிப்பீடு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த 2008ல் தொடங்கிய ஐபிஎல் தொடரில், 2010, 2011ல் சாம்பியன் ஆன சென்னை அணி, 2008, 2012, 2013ல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மேலும், அணித்தலைவர் டோனி தலைமையில் ‘நம்பர்–1’ ஆக உள்ளது.csk

இதனிடையே, 6வது ஐபிஎல் தொடரில் நடந்த சூதாட்ட விசாரணையில், சென்னை அணியை இந்தியா சிமென்ட் நிறுவனம் வாங்கியது தவறு என நீதிமன்றம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து சென்னை அணியின் பங்குகள், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடெட்’ என்ற துணை நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. ஒரு ஐபிஎல் அணியை விற்கும் போது அதன் மொத்த விலையில் 5 சதவீதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கட்டணமாக செலுத்த வேண்டும்.

இந்நிலையில் சென்னை அணியின் மதிப்பு ரூ. 5 லட்சம் என, நிர்வாகிகள் மதிப்பிட்டுள்ளனர். அதாவது, கடந்த 2008ல் ரூ. 355 கோடிக்கு வாங்கப்பட்ட சென்னை அணி, 7 ஆண்டுகள் கழித்து ரூ. 5 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னை அணியை விற்ற வகையில், 5 சதவீத உரிமத் தொகையாக, பிசிசிஐ-க்கு ரூ. 25 ஆயிரம் மட்டும் கொடுத்து விடலாம் என திட்டமிட்டுள்ளனர். ஆனால் புதிய ஐபிஎல் குழு சென்னை அணி மதிப்பை குறைத்து காட்டியதை ஏற்க மறுத்தது.

ஏனெனில், சென்னை அணியின் கடந்த ஆண்டு மதிப்பு ரூ. 450 கோடி என, அமெரிக்க நிறுவனம் ஒன்று மதிப்பீடு செய்தது. இதன் படி, சென்னை அணி விற்றதில் பி.சி.சி.ஐ உரிமத்தொகையாக சுமார் ரூ. 22.5 கோடி (5 சதவீதம்) வரை கிடைத்திருக்க வேண்டும். சென்னை அணி நிர்வாகத்தின் இச்செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Comments
Loading...