Designed by Iniyas LTD
கஜினிகாந்த் – விமர்சனம்
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆர்யா மீண்டும் முழுநீள காமெடி படத்தில் நடித்திருக்கிறார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு பிறகு அப்பாவித்தனமான ஆர்யாவை இந்த படத்தில் பார்க்க முடிகிறது. தனது வழக்கமான ஆர்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். காமெடியிலும் கலக்கியிருக்கிறார்.சாயிஷாவுக்கு இந்த வருடம் வெற்றிகரமாக அமைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆர்யாவுடனான காதல், கொஞ்சும் காட்சிகளில் சாயிஷா ஸ்கோர் செய்திருக்கிறார். பாடல் காட்சிகளில் சொல்லத் தேவையில்லை. தனது நடனத்தால் அனைவரையும் பிரமிக்க வைக்கிறார். கருணாகரன், சதீஷ் இருவருமே சமஅளவில் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். ஆர்யாவுடன் இவர்கள் இருவரும் இணையும் காட்சிகளுக்கு சிரிப்பொலியை கேட்க முடிகிறது.
ஆடுகளம் நரேன், உமா பத்மநாபன், சம்பத் என மற்ற கதாபாத்திரங்களும் கிடைத்த இடங்களில் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். காளி வெங்கட், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோரும் ரசிக்க வைத்துள்ளனர். இனி கதைக்கு உள்ளே செல்லலாம்.
ஆர்யாவின் அப்பாவான ஆடுகளம் நரேன் தீவிரமான ரஜினி ரசிகர். அவர் தனது மனைவியுடன் தர்மத்தின் தலைவன் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, தியேட்டரில் வைத்தே ஆர்யா பிறக்கிறார். இதையடுத்து, தனது மகன் ஆர்யாவுக்கு ரஜினிகாந்த் என்றே பெயர் வைக்கிறார். ஆர்யா வளர வளர, அவருடன் மறதி நோயும் சேர்ந்தே வளர்கிறது.![]()

ஆர்யா ஒரு வேலையில் இருக்கும் போது, யாராவது அவரை அழைத்தாலே, அல்லது அவரிடம் ஏதாவது சொன்னாலோ தான் முன்பு செய்த வேலையை மறந்து அப்படியே விட்டுவிட்டு, சென்று விடுவார். இதையடுத்து நீ ரஜினிகாந்த் இல்லை, கஜினிகாந்த் என்று அனைவரும் ஆர்யாவை கிண்டல் செய்கின்றனர்.
இப்படி மறதி நோயுடன், பெரிய ஆளாகும் ஆர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் நரேன் பெண் தேடி வருகிறார்.ஆனால் ஆர்யாவின் குறையை காரணம் காட்டி யாரும் அவருக்கு பெண் தர முன்வரவில்லை. இந்த நிலையில், சாயிஷாவை, ஆர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
அதில் சாயிஷாவின் அப்பாவான சம்பத் ஆர்யாவை சந்திக்க வருகிறார். ஆனால் அவரை சந்திக்க வேண்டும் என்பதையே ஆர்யா மறந்துவிடுகிறார். வெகுநேரம் காத்திருந்துவிட்டு, ஆர்யா வராத கோபத்தில் சம்பத் திரும்பி செல்கிறார். அவரை சமாதானப்படுத்த செல்லும் ஆர்யா, தனது மறதி பற்றி சம்பத்திடம் சொல்ல, தனது மகளை ஆர்யாவுக்கு திருமணம் செய்த தர முடியாது என்று சம்பத்தும் கைவிரித்துவிடுகிறார்.
தொடர்புடைய பதிவு
இதையடுத்து, சாயிஷாவை சந்திக்கும் ஆர்யாவுக்கு, அவள் மீது காதல் வருகிறது. தனது காதலை சாயிஷாவிடம் சொல்லி இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். இருப்பினும் தனக்கு மறதி இருப்பதை சாயிஷாவிடம் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார் ஆர்யா. இதற்கிடையே சாயிஷாவை திருமணம் செய்து கொள்ள போலீஸ்காரரான சாயிஷாவின் சொந்தக்காரர் ஒருவரும் முயற்சி செய்து வருகிறார்.
இவ்வாறாக தனக்கு இருக்கும் மறதி பிரச்சனையை ஆர்யா எப்படி சமாளிக்கிறார்? சாயிஷாவுடன் கரம்பிடிக்க அவர் மேற்கொள்ளும் போராட்டம்? அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.தனது முதல் இரண்டு அடல்ட் காமெடி படங்கள் மூலம் இளைஞர்களை கவர்ந்த சந்தோஷ் பி.ஜெயக்குமார், இந்த முறை குடும்பபாங்கான கதை மூலம் அனைவரையும் கவர்ந்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தனது முதல் 2 படங்களின் சாயல் ஏதும் இன்றி, முற்றிலும் காமெடி படமாக ரசிக்கும்படி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். தெலுங்கு படத்தின் ரீமேக் தான் என்றாலும், அதிலும் சில மாற்றங்களை கொண்டுவந்திருப்பது சிறப்பு. திரைக்கதையும் ரசிக்கும்படியாக இருக்கிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார்.
பாலமுரளி பாலு இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை ஓரளவுக்கு கைகொடுத்திருக்கிறது. பல்லு ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.