Designed by Iniyas LTD
கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது விழுந்து விபத்துக்குள்ளானது
மும்பை அருகே கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கும்போது விழுந்து விபத்துக்குள்ளானது. ராய்காட் மாவட்டம் உரான் கிராமத்தில் கடற்படை வீரர்கள் இன்று காலை சீட்டாக் ஹெலிகாப்டரில் சென்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டனர். அதில் இரண்டு பைலட்டுகள் மற்றும் இரண்டு வீரர்கள் இருந்தனர். 
பயிற்சி முடிந்து தரையிறங்கும் நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. குறிப்பிட்ட ஹெலிபோர்ட்டில் தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் செங்குத்தாக பாய்ந்து வந்தது. விபத்து ஏற்படப்போவதை உணர்ந்த பைலட்டுகள் மற்றும் அதில் இருந்த வீரர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக கீழே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர், ஹெலிகாப்டரும் தரையில் மோதி சேதமடைந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த 4 பேரும் தெற்கு மும்பையில் உள்ள கடற்படை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.