Designed by Iniyas LTD
கரூர் அருகே 2 கண்டெய்னர் லாரிகளில் ரூ.1600 கோடி பணம்?
சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தவிர்க்க தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைப்படி பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
அப்போது திருப்பூர் அருகே 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்து செல்லப்பட்ட ரூ.570 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கரூர் அருகேயும் பணத்துடன் ஒரு கண்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:–
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள தகரக் கொட்டகை பகுதியில் நேற்று மாலை முதல் 2 கண்டெய்னர் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த லாரியை சுற்றி 5 நபர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் எதற்காக இந்த கண்டெய்னர் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது? என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிந்தவர்களிடம் கேட்டனர்.
அதற்கு பதில் கூறிய அவர்கள் இங்கு யாரும் வரக்கூடாது என்று கூறி துரத்தியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் கண்டெய்னர் லாரி குறித்து விசாரிக்க தொடங்கினர்.
அந்த கண்டெய்னர் லாரிகள் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான ரூ.1600 கோடியை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தகரக்கொட்டகை பகுதிக்கு வந்தபோது அதில் ஒரு லாரி மட்டும் பழுதாகி நின்றது. இந்த லாரியை சரிசெய்ய உபரி பாகங்கள் பூனாவில் இருந்து கொண்டுவரவேண்டும் என்பதால் அந்த லாரி நேற்று மாலையில் இருந்து அங்கேயே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அந்த உதிரி பாகங்கள் கொண்டு வரப்பட்டு பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக உடன் வந்த மற்றொரு லாரியும் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பணத்துடன் நிற்கும் இரண்டு கண்டெய்னர் லாரிகளுக்கும் போதிய பாதுகாப்பு அளித்துள்ளனர்.
இந்த தகவல் அப்பகுதியில் காட்டுதீ போல் பரவியது. இதனால் பல கோடி பணத்துடன் நிற்கும் கண்டெய்னர் லாரிகளை பார்க்க பொது மக்கள் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.