Designed by Iniyas LTD
கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசு தலையிட வேண்டும்!
கர்நாடக தமிழர் மீதான தாக்குதல் சம்பவத்தினை நடுவன் அரசு தலையிட்டு சுமூகமான நிலமைக்கு கொண்டு வர வேண்டும் என மிருகபலிக்கு எதிரான அமைப்பின் தலைவர் மறவன்புலே சச்சிதானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரைநிகழ்த்துகையில்,
இந்திய கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுகின்றார்கள், உயிர்களுக்கும்உடமைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்திய தமிழர்கள் தாக்கப்படும் போது இலங்கைத் தமிழர்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இலங்கைத் தமிழர்களும் கர்நாடக தமிழர்களும் பண்பாடு மற்றும் தொப்புள்கொடி உறவுகள். இவ்வாறான உறவுகள் தாக்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த 4 நாட்களாக நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் ஈழத்தமிழரின் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக அரசின் கையில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கை பயன்படுத்தி உடனடியாக வழமைக்கு திருப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாரும் எவரையும் தாக்கக் கூடாது, போதுமான அளவு காவல்துறையினரை வைத்திருக்கும் கர்நாடக அரசு தாக்குதல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அவ்வாறு முடியாவின் நடுவன் அரசு டெல்லியில் இருந்து பாதுகாப்புப் படையினர் மற்றும் துணைப்படையினர் பொலிஸாரை அனுப்பி நிலமையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கும் கர்நாடக தமிழர்களுக்கும் இடையில் உள்ள இந்த இரத்த உறவினால் தான் இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.
இந்த தாக்குதல் சம்பவங்கள் ஓயாவிடின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். கர்நாடகவில் தமிழர்கள் மீதான தாக்குதலினை நிறுத்தாவிடின் அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்.
பொங்களூர் தமிழ் சங்கம் இனப்படுகொலை மற்றும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டுள்ளதுடன் தமிழ் மக்களுக்கு சார்பாக குரல் கொடுத்து வந்துள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்காக குரல்கொடுத்த கர்நாடக தமிழ் மக்கள் துன்பப்படும் போது அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்.
நடுவன் அரசு கர்நாடகவில் மக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மறவன்புலே சச்சிதானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.