Designed by Iniyas LTD
கால்பந்து அணியின் ஜாம்பவனாக திகழ்ந்த எசிபியோ மாரடைப்பால் மரணம்
போர்ச்சுகல் கால்பந்து அணியின் ஜாம்பவனாக திகழ்ந்த எசிபியோ, நேற்று ஞாயிற்றுக்கிழமை 2014-01-05 மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது வயது 71. கால்பந்து அரங்கில் சிறந்த வீரர்களில் ஒருவராக விளங்கிய எசிபியோ ‘பிளாக் பாந்தர்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.
1966–ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் (9 கோல்) அடித்தவர் இவர் தான். அந்த உலக கோப்பையில் போர்ச்சுகல் 3–வது இடத்தை பிடித்தது. போர்ச்சுகல் அணிக்காக 64 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 41 கோல்கள் அடித்துள்ளார். மற்ற லீக் போட்டிகளையும் சேர்த்து அவர் தனது வாழ்க்கையில் 743 தொழில்முறை ஆட்டங்களில் விளையாடி 733 கோல்களை பதிவு செய்துள்ளார்.
எசிபியோவின் மறைவையொட்டி போர்ச்சுகலில் மூன்று நாள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்றும், தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. கால்பந்து உலகம் ஒரு ஜாம்பவானை இழந்து விட்டதாக சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் செப் பிளாட்டர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.