Designed by Iniyas LTD
கொலம்பியாவில் நிலச்சரிவில் பலியானவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்வு
கொலம்பியா என்னும் தென் அமெரிக்க நாட்டின் மேற்கு பகுதியில் கடுமையான மழை பெய்கிறது. இதனால் அங்குள்ள மலைப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சால்கர் நகரில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலையில் இருந்து மண் மற்றும் பாறைகள் சரிந்து அதன் அடிவாரத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளின் மீது விழுந்து மூடியது.
அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர். தகவல் அறிந்ததும் 50–க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர்களில் விரைந்தனர்.
நிலச்சரிவில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கி 58 பேர் பலியாகினர். 37 பேர் காயம் அடைந்தனர். 31 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. இன்னும் பலரை காணவில்லை. எனவே பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. கொலம்பியா அதிபர் ஜூயான்மானுவல் சான் டோஸ் நிலச்சரிவு ஏற்பட்ட சால்கர் பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்.
