தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கோம்பாவில், தளிர் முன்பள்ளிக்கு ரவிகரன் அவர்களால் இன்னியம் இசைக்கருவிகள் வழங்கிவைப்பு…

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள கோம்பாவில்தளிர் முன்பள்ளிக்கு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் இன்னியம் இசைக்கருவிகள் வழங்கியுள்ளார்.

இவ்வாண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் இருந்து எழுபதாயிரம் உரூபாயானது இதற்கென அவரால் ஒதுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,

பாடசாலைகளுக்கான இன்னியம் இசைக்கருவிகளை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் அவர்கள் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக தெரிவு செய்த பாடசாலைகளுக்கு வழங்கி வருகிறார். 

2014ஆம் ஆண்டு ஐந்து பாடசாலைகளுக்கும் 2015ஆம் ஆண்டு இரண்டு பாடசாலைகளுக்கும் 2016ஆம் ஆண்டு ஏழு பாடசாலைகளுக்கும் (இரண்டு பாடசாலைகள் 2015 இலும் உள்வாங்கப்பட்டு மேம்படுத்தப்பட்டவை) 2017 ஆம் ஆண்டு நான்கு பாடசாலைகளுக்கும், 2018ஆம் ஆண்டு ஒரு பாடசாலைக்குமாக மொத்தம் பதினேழு பாடசாலைகளுக்கு இன்னியம் இசைக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஐந்தாண்டுகளில் பாடசாலைகளுக்கான இன்னியம் இசைக்கருவி வழங்கலுக்காக தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் இருந்து இருபத்தொரு இலட்சத்து முப்பத்தையாயிரம் உரூபாயினை (21,35000.00) வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஒதுக்கியுள்ளார். 

அந்தவகையில் தளிர் முன்பள்ளி முதன்மையாசிரியர் அவர்கள் இன்னியம் இசைக்கருவிகளை பெற்றும் கொள்ளும் நிகழ்வு2018.09.12 ஆம் நாளாகிய இன்று காலை பத்து மணியளவில் முல்லைத்தீவு வலயக்கல்வி பணிமனையில் நடைபெற்றது. மேலும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் குறித்த இசைக்கருவிகளை முன்பள்ளியின் முதன்மை ஆசிரியர் திருமதி.சுதர்சினி அவர்களிடம் கையளித்தார்.

மேலும் இந் நிகழ்வில் திரு.கு.சிவசுப்பிரமணியம் (முன்பள்ளிகளின் உதவி கல்வி பணிப்பாளர்) அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...