Designed by Iniyas LTD
சுப்பிரமணியன் சாமிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அமளி
பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சாமி சமீபத்தில் அசாம் மாநில பல்கலைக்கழத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களை இடிக்கவேண்டும் என்று பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இப்பிரச்சனையை இன்று காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் எழுப்பியது. மாநிலங்களவை இன்று தொடங்கியதும், புதியதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். உடனடியாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பிரமோத் தெவாரி, இப்பிரச்சனையை எழுப்பினார்.
மதசார்பின்மை இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம், சுப்பிரமணியன் சாமியின் சமீபத்திய கருத்து தொடர்பாக அவருக்கு எதிராக குற்றம் பதிவு செய்ய முடியும். என்று கூறினார். இதனையடுத்து துணை சபாநாயகர் குரியன், இப்பிரச்சனையை பூஜ்ஜிய நேரத்தில் எழுப்ப நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது, இது அனுமதிக்கப்படும். அப்போது நீங்கள் இதுதொடர்பாக பேசலாம் என்று கூறினார். இதில், திருப்தி அடையாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி பேசுகையில், இப்பிரச்சனையை பூஜ்ஜிய நேரத்தில் தான் எழுப்ப முடியும் என்று கூறினார். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களை இருக்கைக்கு செல்லுமாறு துணை சபாநாயகர் குரியன் கோரிக்கை விடுத்தார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதனை ஏற்கவில்லை. தொடர்ந்து அரசுக்கு எதிரான கோஷத்தை எழுப்பினர். இதனையடுத்து குரியன், இது ஒழுக்கமற்றது, இதுபோன்று நடந்து கொள்ளாதீர்கள் என்று கூறி அவையை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.