Designed by Iniyas LTD
செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்களால் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. செங்கலடி உறுகாமம் பிரதேசத்தில் உள்ள கிரவல் மண், மற்றும் மண் வளங்களை ஏற்றுவதற்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு செங்கலடி பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் இதனால் தங்களது பிரதேசத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவதுடன் உள்ளூர் வீதிகள் அனைத்தும் பாதிக்கப்படுவதாகவும் எனவே அனைத்து கிரவல் மண் அகழ்வை நிறுத்துமாறு கோரி செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தே பொதுமக்கள் ஆர்பாபட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது உறுகாமம் பிரதேசத்தில் கிரவல் மண் அனுமதி பத்திரம் பெறுவதற்கு வரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வேறு பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு செங்கலடி பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் எமது பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு அனுமதி வழங்க மறுக்கிறார் இதனால் எமது வளம் வெளிமாவட்டங்களுக்கு செல்கிறது.
பிரதேச செயலாளரால் அனுமதி வழங்கப்பட்டவர்கள் சட்டவிரோதமாக காடுகளை அழித்து கிரவல் மண்ணை அகழ்வதால் இயற்கை வளம் அழிக்கப்படுகிறது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
‘நிறுத்து நிறுத்து மண் அகழ்வை நிறுத்து’,
‘அதிகரிகளே பாராபட்சம் வேண்டாம்’,
‘எமது வளத்தை சூரையாடாதே’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர். காடுகளை அழித்து மண் அகழ்ப்படுவதால் காடுகளினுள் இருந்து தற்போது யானைகள் தமது கிராமத்திற்குள் வருவதாகவும் தாம் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்துவருவதாகவும் இதன்போது பொதுமக்கள் மக்கள் தெரிவித்தனர்.