Designed by Iniyas LTD
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – ஸ்டாலின்
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது இணையதள முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 
திடீர் கனமழை தான் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று அ.தி.மு.க. அரசு பச்சை பொய் சொல்கிறது என நான் திரும்ப திரும்ப கூறி வந்திருக்கிறேன். இதை உறுதி செய்யும் விதத்தில் இப்போது மத்திய அரசு அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் கனமழை பெய்யும் என்று 48 மணி நேரத்திற்கு முன்பே தமிழக அரசுக்கு எச்சரிக்கை செய்தும் மாநில அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதுதான் வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறது மத்திய அரசு. தமிழக அரசின் பொய்யினை இந்த அறிக்கை தகர்த்து விட்டது. இது இயற்கை பேரழிவு அல்ல என்ற உண்மையும் இப்போது வெளிவந்துவிட்டது. அ.தி.மு.க. அரசு உருவாக்கிய செயற்கை பேரிடர் இந்த மழை வெள்ள பாதிப்பு என்று தி.மு.க. கூறிவந்தது தற்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
தி.மு.க. சொன்னதை இப்போது மத்திய அரசே உண்மை என்று உறுதி செய்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய அரசின் இந்த அறிக்கைக்கும் தன் தோல்விக்கும் அ.தி.மு.க. அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?. உரிய கால அவகாசம் கிடைத்தும் முன் அறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீரை அ.தி.மு.க. அரசு திறந்துவிட்டதால் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை நாசமானது. இதற்கு அ.தி.மு.க. அரசே முழு பொறுப்பு. ஆகவே உண்மையை மக்களுக்கு அறிவிக்க உடனடியாக நீதி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.