Designed by Iniyas LTD
ஜல்லிக்கட்டிற்கு நடவடிக்கை எடுக்கா விட்டால் தேர்தலை புறக்கணிப்போம் – ஜல்லிக்கட்டு மீட்புக் குழு
ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று ஜல்லிக்கட்டு மீட்புக் குழு அறிவித்துள்ளது. இது குறித்து ஜல்லிக்கட்டு மீட்புக்குழு தலைவர் ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– 
ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரத்தோடு இணைந்தது. ஆனால் இது பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக தவறாக சித்தரிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு பல கிராமங்களில் வழிபாடாக நடத்தப்படுகிறது. எனவே ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வீர விளையாட்டுகளுக்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்களை பாஜக ஏமாற்றிவிட்டது.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசு ஆணையை ஜனவரி 11 ஆம் தேதி வெளியிட்டதற்கு பதிலாக ஜனவரி 13 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டு இருந்தால் சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்து இருக்கும். இதற்கு பாஜகவே பொறுப்பு. வருகிற சட்டசபை தேர்தலில் அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் முதல் வாக்குறுதியாக ஜல்லிக்கட்டு நடத்துவதை வெளியிட்டு உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்பது, தேர்தல் தேதி அறிவித்த பின்பு வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைப்பது, தேர்தலில் 49 ஓ.வுக்கு பிரசாரம் செய்வது ஆகிய முடிவுகளை எடுத்துள்ளோம். ஜல்லிக்கட்டுக்காக தொடர் போராட்டமும் நடத்தப்படும் இவ்வாறு ராஜேஷ் கூறினார்.