Designed by Iniyas LTD
ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரில் நடைபெறுகின்றது
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி நியமனம் குறித்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்க கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அண்மையில் ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய நீதிபதியாக மைக்கோல் டி.குன்ஹாவை கர்நாடகா அரசு நியமித்தது. இந்த நியமனத்தை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் ஆஜராவதில் இருந்து மனுதாரர்கள் ஜெயலலிதா, சசிகலா விலக்களிக்க கோருவதாக புகார் கூறினார்.
இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி நியமிக்கப்பட்டது குறித்து இரண்டு வாரத்தில் விளக்கம் அளிக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மனுதாரர்கள் ஜெயலலிதா, சசிகலா வாய்தா வாங்காமல் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.