Designed by Iniyas LTD
டெல்லி செல்கின்றார் ஜெ
தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்வரும் 14ம் திகதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து மோடியுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். 2014ம் ஆண்டு யூன் 3ல் பிரதமர் மோடியை ஜெயலலிதா சந்தித்தார்.
இதன் பிறகு 2015ம் ஆண்டு ஓகஸ்ட்டில் சென்னைக்கு வந்த பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக பிரச்னைகள் தொடர்பான கோரிக்கை மனுவை முதல்வர் அளித்தார். தற்போது எதிர்வரும் 14ம் திகதி மோடியை சந்திக்க ஜெயலலிதா டெல்லி செல்கிறார். பிரதமருடனான சந்திப்பின்போது முதல்வர் ஜெயலலிதா, ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கம், கச்சத்தீவு மீட்பு விவகாரம், உயர்நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும், தமிழக மீனவர்கள் பிரச்னைககு தீீர்வு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைப்பார் என்று தெரிகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதல்வர் ஜெயலலிதா யூன் 14ம் திகதி காலை டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கிறார். அன்றைய தினமே முதல்வர் சென்னை திரும்புகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.