தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தஞ்சம் கோரிவந்த ஈழத்தமிழர்களை விடுவிக்க வேண்டும் – கொளத்தூர் மணி

இந்தியாவில் தஞ்சம் கோரி வந்து சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொளத்தூர் மணி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் ஈழ எதிலியர் உரிமைக் கூட்டமைப்பின் தலைவர் கொளத்தூர் மணி, இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கைில், 1983ஆம் ஆண்டு யுத்தத்திற்குப் பிறகு இலங்கைத் தமிழர்கள் தமது உயிருக்குப் பயந்து இந்தியாவிற்கு வந்தனர்.kolathur-mani

இவ்வாறு வந்தவர்கள் தமிழகத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக அகதிகளாக உள்ளனர். இவர்கள் 107 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 1991ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்த ஈழ மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக கொளத்தூர் மணி குற்றம் சாட்டினார். ஆகவே இவை உச்ச கட்டத்தை அடையும் முன் அனைத்து ஈழத் தமிழர்களையும் விடுவிக்குமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். இதன்படி, ஈழத் தமிழர்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர் வரும் 27ஆம் திகதி, மாலை 5 மணியளவில், சென்னை மெரினா கடற்கரையில் முதல்கட்ட கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும் எனவும் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

“இலங்கைக்கு திரும்ப இருக்கும் அகதிகளுக்கு அபராதம் விதிப்பதை கைவிடுக” போன்ற 5 விடயங்கள் உள்ளடங்கிய கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த கையெழுத்து இயக்கத்தை ஆரம்பிக்க இருப்பதாக குறிப்பிட்டார். இந்த செயற்பாட்டிற்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும், அரசியல் கட்சித்தலைவர்களும், சிந்தனையாளர்கள், கவிஞர்கள் எனப் பலரும் கலந்து கொள்வதற்கு ஒப்புதல்களை தெரிவித்துள்ளதாகவும் செய்தியாளர் சந்திப்பில் கொளத்தூர் மணி கூறினார்.

Comments
Loading...