Designed by Iniyas LTD
தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற இரு சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர்
யாழ்ப்பாணத்தில் தனியார் வகுப்பிற்கு சென்ற இரண்டு சிறுவர்கள் காணாமல்போயுள்ளதாக யாழ்.பொலிஸார் இன்று தெரிவித்தனர். யாழ். குருநகர் கடற்கரை வீதிப் பகுதியைச் சேர்ந்த அன்ரன் அமலராஜ் (வயது 15) மற்றும் அதே இடத்தினைச் சேர்ந்த அமலதாஸ் துசாந்தன் (வயது 16) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளதாக குறித்த சிறுவர்களின் பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இரு சிறுவர்களும் நேற்று மாலை 4.30 மணியளவில் டேவிட் வீதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு மாலை நேர வகுப்பிற்கு சென்றுள்ளனர். மாலை நேர வகுப்பு முடிந்தும் இரவு 10 மணி ஆகியும் இரு பிள்ளைகளும் வீட்டிற்கு வரவில்லை என பெற்றோர்கள் தேடியுள்ளனர். அதன்பின்னர் இரவு 10 மணியளவில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இருவரின் நிலமை தொடர்பில் இன்றுகாலை பல்வேறு முக்கிய இடங்களில் தேடிய போது, இருவரின் துவிச்சக்கர வண்டிகளும் யாழ். புகையிரத நிலையத்தில் பெற்றோரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இரு பிள்ளைகள் எங்கு சென்றிருப்பார்கள் என்பது தொடர்பில் பெற்றோர்கள் தேடி வருகின்றதுடன், இரு பிள்ளைகளிடமும் வகுப்பிற்கு சென்ற போது கையில் 1000 ரூபா பணம் இருந்துள்ளதாகவும் பெற்றோர்கள் கூறினார்கள். இச்சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.