Designed by Iniyas LTD
தமிழக மீனவர்களை இந்திய குடிமகனாக பார்க்க மறுக்கின்றனர் மத்திய அரசு- பழ நெடுமாறன்
அதிமுகவினர் பரவலாக செய்துவரும் போராட்டம் பெங்களூர் சிறையில் உள்ள ஜெயலலிதாவிற்கு பெரும் கேடுகளை விளைவிக்கும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். சிதம்பரம் கமலீஸ்வரன் கோயில் தெருவில் உள்ள தில்லை கோவிந்தராஜா மண்டபத்தில் தமிழர் தேசிய முன்னணி கடலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கீ.செ.பழமலை தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்து பேசினார். அவர், “தமிழர்களுக்கும், தமிழக அரசுக்கும் சொந்தமான தமிழ் பேரரசர்கள் கட்டி புதுப்பித்த சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சொத்துக்களையும், அதன் நிர்வாகத்தில் தமிழகஅரசு சென்னை உயர்நீதிமன்ற தீப்பின்படி மீண்டும் ஏற்க வேண்டும். தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இருந்த போது வைக்கப்பட்ட உண்டியல்களில் கடவுளுக்காக பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் மற்றும் இதர பொருள்களை தீட்சிதர்களுக்கு வழங்கியதை மீண்டும் அரசு கைப்பற்ற வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோயில் கருவறைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் தீண்டாமை, இனத் தீண்டாமையை நீக்கி அனைத்து சாதியினரும் பெண்கள் உள்ளிட்டோரை அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் சிதம்பரத்தில் சிறப்பு மாநாடு நடத்தப்படவுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். சட்டரீதியாக முறையிட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதைவிட்டு விட்டு, அதிமுகவினர் வீதிகளில் இறங்கி மக்களுக்கு இடையூரு ஏற்படும் வகையில் பேருந்து கண்ணாடிகளை உடைப்பது, கடை அடைப்பு நடத்துவது தவறானதாகும். பட்டாசு வெடித்து கோயில் கோபுரம் சேதமுற்றுள்ளது.
தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மக்கள் பணிகளை கவனிக்காமல் பெங்களூர் சிறைவாசலில் காத்து கிடக்கின்றனர். அப்படியிருக்கும் போது அரசு அதிகாரிகள் எப்படி செயல்படுவார்கள். இதற்கு அதிமுகவினர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் ஒன்று கூடி முற்றுப்புள்ளி வைப்பார்கள். சட்டம் நீதித்துறை மீது மதிப்பு இருந்தால், அதிமுகவினர் இச்செயலலில் ஈடுபட மாட்டார்கள். இதே நிலை நீடித்தால், சிறையில் உள்ள ஜெயலலிதாவிற்கு பெரும் கேடு விளைவிக்கும்.
அரசு அலுவலகங்களில் பொதுவாக திருவள்ளுவர் படங்களை மட்டுமே வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மீனவர் பிரச்சனையில் மன்மோகன்சிங் அரசும், மோடி அரசும் தமிழக மீனவர்களை இந்திய குடிமகனாக பார்க்க மறுக்கின்றனர். உலகிலேயே 5வது மிகப்பெரிய கப்பல்படை இந்தியாவுடையது. ஆனால் அவர்கள் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கின்றனர்.
இல்லையெனில் மத்தியஅரசு தமிழக மீனவர்களுக்கு ஆயுத பயிற்சி பெறவும், பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும். உலகித்திலேயே சமஸ்கிருதம் பேசுபவர்கள் 15 ஆயிரம் பேர்தான். இந்தியஅரசு சமஸ்கிருதத்தை திணிக்க முயன்றால், இந்தி திணிப்பு போராட்டத்தை விட, மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்’’ என பழ.நெடுமாறன் தெரிவித்தார்.