Designed by Iniyas LTD
தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு தொடர்பாக மோடிக்கு ஜெ கடிதம்
தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்கும்போது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் மீன்பிடி சாதனங்கள் மற்றும் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதுதொடர்பாக ஒவ்வொரு முறையும் முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளார். 
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் கடந்த 7-ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கை கடற்படையினரால் கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ள 16 மீனவர்கள் உள்பட, அங்கு காவலில் வைக்கப்பட்டுள்ள 73 மீனவர்களையும், 101 படகுகளையும் விடுவிக்க வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளார்.
‘இலங்கை அதிகாரிகள், தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை விடுவிக்காததால் மீனவர்களின வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்படுவதால் படகுகள் பழுதாகி ஏராளமான நிதி இழப்பு ஏற்படுகிறது. எனவே, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை புதுப்பித்து பயன்படுத்தத் தக்க வகையில் விரைவில் விடுவிக்கப்படுவதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்” என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.